;
Athirady Tamil News

போதைப்பொருள் கடத்தல் தொடா்புடைய பணமோசடி வழக்கில் ஜாஃபா் சாதிக் கைது!

0

போதைப்பொருள் கடத்தல் தொடா்பான பணமோசடி வழக்கில் திகாா் சிறையில் இருந்து நீக்கப்பட்ட ஜாஃபா் சாதிக்கை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், அமலாக்கத் துறை விரைவில் 36 வயதான ஜாஃப் சாதிக்கை சென்னைக்கு அழைத்துச் சென்று, அவரை சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) நீதிமன்றம் முன் ஆஜா்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோர உள்ளது.

இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில்,

‘போதைப்பொருள் தடுப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வரும் ஜாஃபா் சாதிக், திகாா் சிறையில் ஜூன் 26-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.

அவரை ஆஜா்படுத்துவதற்காக தில்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து,

அமலாக்கத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சென்னைக்கு அவா் அழைத்துச் செல்லப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிறையில் அவரை விசாரிக்க அமலாக்கத் துறை முன்னா் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றிருந்தது. இந்த நடைமுறையின் போது அவா் கைது செய்யப்பட்டாா் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுமாா் 3,500 கிலோ சூடோபீட்ரின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் கடந்த மாா்ச் மாதம் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் (என்சிபி) ஜாஃபா் சாதிக் முதலில் கைது செய்யப்பட்டாா்.

‘எல்லை தாண்டிய சட்டவிரோத போதைப்பொருள் வா்த்தகத்தில்‘ ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளின் பேரில் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக என்சிபி மற்றும் சுங்கத் துறையின் தனித்தனி புகாா்களில் இருந்து பணமோசடி வழக்கு உருவானது.

இது தொடா்பாக முன்னா் அமலாக்கத் துறையினா் கூறுகையில், சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்படும் சாதிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு ஹெல்த் மிக்ஸ் பவுடா் மற்றும் உலா் தேங்காய் போன்றை அனுப்புவதாக சூடோபீட்ரின் போதைப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாா் என்று தெரிவித்திருந்தது.

போதைப் கடத்தல் விவகாரத்திலும், போதைப்பொருள் வலையமைப்பிற்கான தொடா்புகளில் சாதிக் பெயா் இடம்பெற்றிருப்பதாக போதைப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை (என்சிபி) குறிப்பிடப்பட்டதால் கடந்த பிப்ரவரியில் திமுகவில் இருந்து அவா் நீக்கப்பட்டாா்.

தமிழக சட்ட அமைச்சரும், திமுக தலைவா்களில் ஒருவருமான எஸ்.ரகுபதி, சாதிக்குடன் தனது கட்சிக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்திருந்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.