;
Athirady Tamil News

சாவகச்சேரி நகரசபையின் காணி விவகாரம்: ஆளுநருக்கு சிறீதரன் எம்.பி. கடிதம்

0

சாவகச்சேரி நகரசபையால் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் பூங்கா நிர்மானப் பணிகளை துரிதப்படுத்த ஆவனசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) வடக்குமாகாண ஆளுநருக்கு இன்று (28) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளதாவது,

“சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட நகரச்சூழலில், சிறுவர் பூங்கா ஒன்றை நிறுவ வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, நகரசபையின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட காணி எல்லைப்படுத்தப்பட்டு சுற்றுமதில் அமைக்கப்படும்.

பொருளாதார தளம்பல் நிலை
அதேவேளை, அந்தக் காணியில் ஐம்பது இலட்சம் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணமும் பொருத்தப்பட்டு துரித அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், குறித்த காணியை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு வழங்கும் நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முனைப்புக் காட்டி வருகின்றார்.

சாவகச்சேரி நகர எல்லைக்குட்பட்ட மக்களின் வரிப்பணத்திலிருந்தே, நகரசபையால் குறித்த காணி கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுற்றமை, நாட்டின் பொருளாதார தளம்பல் நிலை உள்ளிட்ட காரணங்களால் சிறுவர் பூங்கா நிர்மாணப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அரசியல் அழுத்தங்கள்
இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அப்பிரதேச மக்களின் கோரிக்கைக்கும், எதிர்பார்ப்புக்கும் மாறாக, குறித்த காணியை மத்திய அமைச்சின் கீழுள்ள சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு வலிந்து வழங்க முற்படுவதென்பது, வடக்கு மாகாணத்தின் காணி அதிகாரத்தையும், உள்ளூராட்சி மன்றங்களின் சுயாதீன இயங்குநிலையையும் சிதைக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

குறித்த பிரதேச மக்களின் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தாண்டிய, அமைச்சரின் எதேச்சதிகாரத்தனமானதும் காலப் பொருத்தமற்றதுமான முடிவுகளுக்கு திணைக்கள மட்ட அதிகாரிகள் நியாயபூர்வமான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டிய சமூகக் கடமையிலிருந்து தவறியுள்ளமை, அதன்பின்னுள்ள அரசியல் அழுத்தங்களின் வீரியத்தையே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.

எனவே, இதுவிடயமாக தாங்கள் உயரிய கரிசனை கொண்டு, சாவகச்சேரி நகரசபையால் மக்கள் நலன்சார் திட்டம் ஒன்றுக்காக கொள்வனவு செய்யப்பட்ட காணியை, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, குறித்த காணியில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கையளிப்பதற்கு ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.