;
Athirady Tamil News

8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் – நீட் தேர்வு விவகாரத்தில் அதிரடி காட்டும் மு.க.ஸ்டாலின்

0

நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வு தீர்மானம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளால் நாடெங்கும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வை தேசிய அளவில் ரத்து செய்ய வேண்டும், நீட்விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.06.2024) தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மு.க.ஸ்டாலின் கடிதம்
இது குறித்து மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதை தொடர்ந்து, டெல்லி, மேற்கு வங்காளம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் ஆகிய மாநில சட்டமன்றங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தீர்மானம் நிறைவேற்று கோரி அம்மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும், தேசிய அளவில் இந்தத் தேர்வு முறையை இரத்து செய்திட வேண்டுமென வலியுறுத்துவதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டினுடைய கருத்தாகும் எனத் தெரிவித்துள்ளார். அந்த வகையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதுதொடர்பான சட்ட முன்வடிவு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளதாக தமது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, சமீபத்தில் நடந்த நீட் தேர்வின்போது நடைபெற்ற முறைகேடுகள், நீட் தேர்விற்கெதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். பல மாநிலங்களும் இந்தத் தேர்வு முறையை இரத்து செய்யவேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 28-6-2024 அன்று, நீட் தேர்வு முறையை இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதற்கான சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டுமென்றும், தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.