;
Athirady Tamil News

மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி வெட்டிப் படுகொலை: சிவகங்கையில் பரபரப்பு

0

மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அவிழ்த்து விடுவதில் நடந்த தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிவகங்கையில் அண்ணன், தம்பி இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கடந்த 22.6.2024 தேதி கல்லல் அருகே பணங்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், மதுரை மாவட்டம், நாச்சிகுளத்தைச்சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த வல்லவன் மகன் ராஜேஷ்(19), சாத்தரசன்பட்டி சிவாஜி மகன் நவீன்(19), கிளுவச்சி முத்துமணி மகன் அஜய்(20) ஆகியோர்கள் மஞ்சுவிரட்டில் காளையை அவிழ்த்து விட்டனர்.

அந்தக்காளையை சிவகங்கை புதுப்பட்டி சக்தி மகன் மதன்(20) என்பவரின் நண்பர்கள் அந்தக் காளையை பிடித்துள்ளனர். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட விரோதத்துடன் இருந்த மதன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் ஞாயிற்றுக்கிழமை ( 30.6.2024) இரவு சுமார் 10.30 மணிக்கு இரு சக்கர வாகனங்களில் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி ஆலடி கண்மாய் வாய்க்கால் பகுதியில் உள்ள தைல மரக் காட்டுக்குள் மஞ்சுவிரட்டு காளையுடன் இருந்த ஜெயசூர்யா, சுபாஷ், நவீன், ராஜேஷ் உள்பட ஐந்து நபர்களை, 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில் அண்ணன், தம்பி ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மற்ற மூன்று நபர்களையும் வெட்ட முற்படும் பொழுது அவர் தப்பியோடி விட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக உயிர் தப்பிய ராஜேஷ், நவீன், ஆகியோர் காளையார்கோவில் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்குச்சென்ற காளையார்கோவில் போலீஸார் இருவரது சடலங்களையும் உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காளையார்போலீஸார் வழக்குப்பதிந்து தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை பிடித்த தகராறில் இரட்டைக் கொலை நடந்தது அப்பகுதி மக்களையும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.