யாழில். வெதுப்பகங்களுக்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தண்டம்
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/07/Screenshot-2024-07-02-143037-666x430.jpg)
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு வெதுப்பங்களுக்கும் ஒரு இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது
கொக்குவில் பகுதியில் உள்ள வெதுப்பகங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த மாதம் 12ஆம் திகதி சோதனைக்கு உட்படுத்திய போது, இரு வெதுப்பகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.
அவற்றுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரினால், யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , கடந்த 24ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதன் போது ஒரு வெதுப்பகத்தை திருத்த வேலைகளை முடிவடையும் வரை சீல் வைத்து மூட உத்தரவிட்ட மன்று , மற்றைய வெதுப்பக உரிமையாளரை உடனடியாக சுகாதார குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணித்து வழக்கினை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தார்.
அதன் பிரகாரம் இன்றைய தினம் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, இரண்டு வெதுப்பகங்களும் சுகாதார குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மன்றில் அறிக்கை தாக்கல் செய்தார்
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் இரண்டு வெதுப்பக உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து மன்று தலா 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.