;
Athirady Tamil News

பதவி விலகல் கடிதத்தை கையளித்த பிரான்ஸ் பிரதமர் அட்டல்

0

பிரான்ஸில் (France) நேற்று முன் தினம்  வெளிப்பட்ட பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் கப்ரியல் அட்டல் (Gabriel Attal) இன்று தனது பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனிடம் (Emmanuel Macron) கையளித்துள்ளார்.

நேற்றைய தேர்தலில் இடதுசாரி அணி ஆச்சரியமான வெற்றியை பெற்ற நிலையில் மக்கரன் தரப்பு அரசாங்கம் முடிவுக்கு வந்துள்ளதை இந்த நகர்வு எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த தேர்தலில் அதிதீவிர வலதுசாரி அணியான மறீன் லுப்பனின் தேசிய பேரணி கட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என கணிக்கப்பட்டிருந்த போதிலும் இடதுசாரிகளின் ஒன்றிணைவு, வெற்றியை தடுத்து நிறுத்தியுள்ளது.

புதிய அரசியல் நெருக்கடி
இந்த தேர்தலில் இடதுசாரிகள் அதிகமான ஆசனங்களை கைப்பற்றியுள்ள போதிலும் எந்தவொரு கட்சிக்கு பெரும்பான்மை அற்ற நிலை உருவாகியுள்ளமை நாட்டை புதிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

பிரான்ஸ்சில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டிருந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.

577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்தவொரு கூட்டணியும் பெரும்பான்மையை பெறாத நிலைமை ஏற்பட்டுள்ளதையடுத்து பிரதமர் கப்ரியல் அட்டல் இன்று முற்பகல் தனது பதவி விலகல் கடிதத்தை அரசதலைவர் இமானுவேல் மக்ரோனிடம் கையளித்துள்ளார்.

இடதுசாரிக் கூட்டணி
அந்த வகையில் ஜுன் லுக் மிலென்சொன் தலைமையிலான நியூ பொப்புலர் ஃபுரண்ட் என்ற இடதுசாரிக் கூட்டணி 32.6 வீத வாக்குகளுடன் 188 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இம்மானுவேல் மக்ரோனின் மையவாத கட்சி 27.9 வீதமான வாக்குகளுடன் 161 ஆசனங்களையும் மரீன் லு பென்னின் தேசிய பேரணி கட்சி தலைமையிலான கூட்டணி 24.6 வீத வாக்குகளுடன் 142 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.