;
Athirady Tamil News

ரத்து செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளின் நியமனங்கள்: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

0

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க (R.M.L.Rathnayake) தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் நியமனங்களை மீண்டும் ரத்து செய்யுமாறும் மாகாண ஆளுநர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்து இந்த நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் சட்டம்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போதிலும், தற்போது உள்ளூராட்சித் தேர்தல் சட்டம் நடைமுறையில் உள்ளதால், இந்த நியமனங்கள் சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில மாகாண ஆளுநர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வையிட முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களை நியமித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட பல தரப்பினரும் அண்மையில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாக தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பல மாகாணங்களின் ஆளுநர்கள் இவ்வாறான நியமனங்களை ரத்து செய்ததாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.