;
Athirady Tamil News

பாடசாலை கட்டடம் அமைக்க 8 மில்லியன் ரூபாவை செலவு செய்த 36 வயது இளம் தொழிலதிபர்

0
video link-
 

 

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் பூரணப்படுத்தப்பட்ட இரண்டாம் மாடி கட்டிடம் உத்தியோகபூர்வமாக ஞாயிற்றுக்கிழமை(14) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபரும் Essam Group of company முகாமைத்துவ பணிப்பாளருமான செல்லத்துரை முஹமட் றிப்னாஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ரூபா 80 இலட்சத்திற்கும் அதிகமான தனது தனிப்பட்ட செலவில் நான்கு வகுப்பறைகளை கொண்டமைந்த புதிதாக பூரணப்படுத்தப்பட்ட கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் இரண்டாம் மாடி கட்டிடத்தை ஏனைய அதிதிகளுடன் இணைந்து திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வானது கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா(எல்.எல்.பி) தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது 1987 ஆண்டு பிறந்த நான் இப் பாடசாலையின் பழைய மாணவன்.1993 ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரை தரம் 1 தொடக்கம் 5 வரை கல்வி கற்றேன்.என் வாழ்நாளில் இன்று மறக்க முடியாத நாள்.இது எனது முதல் மேடை.கன்னி பேச்சு.30வருடத்திற்கு பின்னர் இந்த இடத்தில் பேச வைத்த இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவிக்கின்றேன்.இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுக்க மாட்டான்.கல்வி பொருளாதாரம் அறிவு இவ்வாறு இதில் ஒன்றை கொடுப்பான்.இறைவன் இவ்வாறு எமக்கு கொடுக்கின்ற கொடை சமூகத்திற்கு பயன்படாமல் இருந்தால் நாம் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.நாம் வாழ்ந்ததற்குரிய அடையாளம் எமது சமூகத்தில் கிடைக்கப் பெற வேண்டும்.அது அறிவாக கூட இருக்கலாம்.அது நீங்கள் பெற்ற பொருளாதாரமாக இருக்கலாம்.அது சமூகத்திற்கு சேரவில்லையாயின் நாம் வெறும் ஆட்கள்.நாம் இந்த சமூகத்தில் என்ன நன்மைகளை பெற்றோமோ அதை நான்கு பேர் பயன்பெற ஆவண செய்ய வேண்டும்.மிகப்பெரும் தர்மம் யாதெனில் நாம் பெற்றதை அல்லது நாம் கற்றதை மற்றுமொருவருக்கு சொல்லிக்கொடுப்பதாகும்.கற்பித்தல் ஆகப்பெரிய தர்மம் என இந்த சமூகத்திற்காக அனைவரும் ஒன்றினைந்து செயற்பட முன்வர வேண்டும் என பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய 36 வயது மதிக்கத்தக்க பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபரும் Essam Group of company முகாமைத்துவ பணிப்பாளருமான செல்லத்துரை முஹமட் றிப்னாஸ் குறிப்பிட்டார்.

பின்னர் வரவேற்பு மற்றும் தலைமை உரையினை தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.அதனை தொடர்ந்து பிரதம அதிதி கௌரவ அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து பிரதம அதிதி மற்றும் ஏனைய அதிதிகளால் பாடசாலை அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதிக்கு ஏனையவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் ஏனைய அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் .எம்.எஸ்.சஹுதுல் நஜீம்,கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்(நிர்வாகம்) எம்.எச்.எம் ஜாபீர்,ஆரம்பப் பிரிவு கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளரும் கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளருமான யூ.எல்.றியால் ,அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ரி.எம் அனப்,கல்முனையான்ஸ் போரம் அமைப்பின் தலைவர் எம். முபாரிஸ்,சிவில் பொறியியலாளர் எம்.வை .அஸாம்,பழைய மாணவர் செயலாளர் எஸ்.எச் எம் .அஜ்வத்,தென்கிழக்கு பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம் நிஜாம் , பாடசாலை ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள், ,அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான ரி.எம். இர்பான்,எம்.ஜெ.எம் ஜெசில், எம்.எம்.எம்.ஜெளபர், எம்.எம் சமீறுல்லாஹி, ஐ.ஹசீனா பானு , ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் மிகக் குறுகிய காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிவடைந்து.

அத்துடன் இந்நிகழ்வில் இப்பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர்களான எம்.ரி.ஏ.அஸீஸ் மற்றும் ஏ.எல்.அப்துல் கமால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் குறித்த நிகழ்வு இரவு இராப்போசனத்துடன் சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.