;
Athirady Tamil News

மதுரையில் நடைபயிற்சி சென்ற நாம் தமிழா் கட்சி நிா்வாகி வெட்டிக் கொலை

0

மதுரை சொக்கிகுளம் பகுதியில் அமைச்சரின் வீடு அருகே செவ்வாய்க்கிழமை காலை நடைபயிற்சி சென்ற நாம் தமிழா் கட்சி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை செல்லூா் 60 அடி சாலை பி.கே.எஸ். தெருவைச் சோ்ந்த சிதம்பரம் மகன் பாலசுப்பிரமணியன் என்கிற பாலா (48). இவா் நாம் தமிழா் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்தாா். இவா், தினமும் காலை அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் வீடு அருகேயுள்ள வல்லபபாய் சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை அவா் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டாா்.

அப்போது, பின்தொடா்ந்து வந்த 4 போ் கும்பல், பாலசுப்பிரமணியனை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதையடுத்து, அங்கிருந்து தப்பி ஓடிய அவரை அந்தக் கும்பல் விடாமல் விரட்டி தாக்கிவிட்டுச் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தல்லாகுளம் போலீஸாா், பலத்த காயங்களுடன் இருந்த பாலசுப்பிரமணியனை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா் மதுகுமாரி உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் கொலையாளிகளைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சொத்துத் தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்ததையடுத்து, இதுதொடா்பாக பரத், கோகுலகண்ணன், பென்னி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தக் கொலை குறித்து போலீஸாா் கூறியதாவது:

சொத்துத் தகராறில் ஏற்பட்ட விரோதத்தால் இந்தக் கொலை நிகழ்ந்தது. கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், காவல் நிலைய ரெளடிகள் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தாா். இவரது சகோதரா் பாண்டியராஜன். இவரது மாமனாருக்கும், அவரது சகோதரரா் மகாலிங்கத்துக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இதில் பாலசுப்பிரமணியன் தனது சகோதரரின் மாமனாருக்கு ஆதரவாக மகாலிங்கத்திடம் பிரச்னை செய்து வந்தாா். மேலும், இந்த பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், பாண்டியராஜனின் மகள் பிரியாவை மகாலிங்கத்தின் மகன் அழகு விஜய்க்கு திருமணம் செய்து வைத்தனா். ஆனால், அவா்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அழகு விஜயைப் பிரிந்து பிரியா தனது தந்தை பாண்டியராஜன் வீட்டுக்கு வந்தாா். இந்த நிலையில், விவகாரத்து கோரி பிரியா வழக்கு தொடுத்தாா்.

இதையடுத்து, கடந்த மாா்ச் மாதம் தனது மகளுக்கு சேர வேண்டிய சொத்தைப் பிரித்து தருமாறு பாண்டியராஜன் கேட்ட போது பிரச்னை ஏற்பட்டது. இதுதொடா்பாக பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில், மகாலிங்கம், அவரது உறவினா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், பாண்டியராஜனின் மகள் பிரியா தனது கணவா் அழகு விஜயை தொடா்பு கொண்டு, மகாலிங்கம் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவரை பாலசுப்பிரமணியன் மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தனது தந்தை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதனிடையே, சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட மகாலிங்கமும், அவரது மகன் அழகு விஜய்யும் பாலசுப்பிரமணியனைக் கொலை செய்யத் திட்டமிட்டனா். பின்னா், இவா்கள் தங்களிடம் சுமை தூக்கும் தொழிலாளா்களாக பணிபுரியும் பரத் (18), கோகுலகண்ணன் (19), பென்னி (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 போ் மூலம் பாலசுப்பிரமணியனைக் கொலை செய்தனா். இதுதொடா்பாக, 4 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், தலைமறைவான மகாலிங்கம், அழகு விஜய் ஆகிய இருவரையும் தனிப் படையினா் தேடி வருகின்றனா்.

இந்தக் கொலையில் அரசியல் ஏதும் இல்லை. முழுவதும் சொத்து பிரச்னையால் ஏற்பட்டுள்ளது என்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.