;
Athirady Tamil News

உ.பி இளைஞருக்கு 7 முறை பாம்பு கடிக்கவே இல்லை.., பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆட்சியர்

0

இளைஞர் ஒருவர் தனக்கு கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்ததாக மாவட்ட ஆட்சியர் இந்துமதியிடம் புகார் அளித்துள்ளார்.

40 நாட்களில் 7 முறை
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விகாஸ் தூபே (வயது 24). இவரை கடந்த 40 நாட்களில் மட்டுமே 7 முறை விஷப் பாம்புகள் கடித்துள்ளது.

இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, முதல் முறையாக கடந்த ஜூன் -2 திகதி பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார்.

பின்னர், ஜூன் 2 முதல் ஜூலை 7 -ம் திகதி வரை 6 முறை பாம்பு கடித்துள்ளது. இவர், வீட்டில் இருப்பதால் தான் பாம்பு கடிக்கிறது என்று உறவினர் வீட்டிற்கு விகாஸை அவரது பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்.

ஆனால், உறவினர் வீட்டில் வைத்தும் 5-வது முறையாக கடித்துள்ளது. அதன்பிறகு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 6 -வது முறையாக கடித்துள்ளது. இதேபோல அவருக்கு கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்துள்ளது.

இதுகுறித்து விகாஸ் தூபே கூறுகையில், “என்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. என்னை கடிக்க போவதை முன்கூட்டியே என்னால் உணர முடிகிறது” என்றார்.

மாவட்ட ஆட்சியர்
இந்நிலையில், தனக்கு கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்ததாக தமிழரான மாவட்ட ஆட்சியர் சி.இந்துமதியிடம் அந்த இளைஞர் புகார் அளித்திருந்தார்.

பின்னர், இதுகுறித்து விசாரிக்க, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் தலைமையில் குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டார். அவர்கள், 48 மணிநேர விசாரணைக்கு பிறகு அந்த அறிக்கையை ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில், “விகாஸை ஒரே ஒருமுறை தான் பாம்பு கடித்துள்ளது. இதில் ஏற்பட்ட அச்சத்தால் பாம்பு பீதி அடைந்துள்ளார். இதனால், 6 முறை தனக்கு பாம்பு கடித்ததாக நினைத்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, விகாஸை முதல் முறை பாம்பு கடித்ததுமே அவர் குற்றம் செய்துவிட்டதாக கிராமத்தினர் அவரை பயமுறுத்தியுள்ளனர். இதனால், அவர் அச்சமடைந்து இவ்வாறு செய்துள்ளார்.

இதையடுத்து, பாம்பு கடி சிகிச்சைக்கு பணப் பற்றாகுறையால் விகாஸ் குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, இந்த பிரச்சனைக்கு விசாரணை குழு அமைத்து ஆட்சியர் தீர்த்து வைத்தார்.

இந்த ஆட்சியர் இந்துமதி மதுரை மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.