;
Athirady Tamil News

இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து! -சிறை அவலங்களை அம்பலப்படுத்திய மனைவி

0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து என அவரது மனைவி புஷ்ரா பீபி(49) தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஊழல் முறைகேடுகள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இம்ரான் கான் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர் கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

அவருடைய மனைவி புஷ்ரா பீபியும் ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிறையிலடைக்கப்பட்டுள்ள தன் கணவர் இம்ரான் கானுக்கும், தன்னுடைய உயிருக்கும் உரிய பாதுகாப்பில்லை என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் புஷ்ரா பீபி.

அட்டாக் சிறையில் தன் கணவரை அவர் நேரில் சந்தித்தபோது, இம்ரான் கான் உடல் மெலிந்து பலவீனமாகக் காணப்பட்டதையும், அவரது தலை முடிக்குள் இருந்து வண்டுகள் வெளியேறியதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த சிறையில் அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லாத சூழலில் இம்ரான் கான் இருந்து வருவதாகவும் மோசமான உணவுகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இம்ரான் கானுடன் ஒப்பிடுகையில் அவரைப் போலவே அரசியல் குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டுள்ள பிற முக்கிய நபர்களுக்கும் தலைவர்களுக்கும் அளிக்கப்படும் வசதிகளும் சலுகைகளும் இம்ரான் கானுக்கு மறுக்கப்படுவதாகவும், அவருக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்து தரப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்ட உணவில், கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தும் திரவங்கள் கலக்கப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் புஷ்ரா பீபி.

ஒரு தேசத்தின் முன்னாள் பிரதமர் சிறையில் இத்தகைய அவல நிலையில் வாடுவது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.