;
Athirady Tamil News

தூத்துக்குடி துப்பாக்கி சூடு; இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்தது நியாயமா? நீதிமன்றம் கேள்வி

0

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் நீதிபதிகள் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு
2018 ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து, காவல் அதிகாரிகள் உள்பட பலர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை
இதில் சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என கூறியது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சொத்து விவரங்களைச் சேகரிப்பது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் கேட்கப்பட்டது.

நீதிபதி கேள்வி
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர் டி ஜி பி ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரணை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என கூறிய நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர். உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்த வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம்?, கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டுள்ளது. அப்பொழுது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 மாதங்கள் ஒத்தி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.