;
Athirady Tamil News

அமெரிக்கா-ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுக்கு இடையே 26 கைதிகள் பரிமாற்றம்

0

அமெரிக்கா – ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே இன்று கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது.

துருக்கியின் தலைநகரான அங்காராவில் இந்த கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி உள்ளிட்ட 7 நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 26 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதில் 2 சிறார்கள் உட்பட 10 கைதிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 13 கைதிகள் ஜேர்மனிக்கும், 3 கைதிகள் அமெரிக்காவுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பான மூன்றாவது ஒப்பந்தம் இதுவாகும்.

முன்னதாக, ஏப்ரல் 2022 மற்றும் டிசம்பர் 2022-இல் இரு நாடுகளுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் இருந்தது. பனிப்போருக்குப் பிறகு நடந்த மிகப்பாரிய பரிமாற்றமாக இது கருதப்படுகிறது.

அமெரிக்க பத்திரிகையாளர்
ரஷ்யா இன்று அமெரிக்க ஊடக நிறுவனமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச்சை (Evan Gershkovich) விடுவித்தது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA-வுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இவனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யா கைது செய்தது.

கடந்த மாதம், ஜூலை 19ம் திகதி, உளவு பார்த்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1600 கி.மீ தொலைவில் உள்ள கிழக்கு நகரமான யெகாடெரின்பர்க்கில் இருந்து இவான் கைது செய்யப்பட்டான்.

இவான் தவிர மேலும் இரண்டு அமெரிக்க பிரஜைகள் ரஷ்யாவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய பால் வீலன் (ex-U.S. Marine Paul Whelan) மற்றும் வானொலி பத்திரிகையாளர் அல்சு குர்மஷேவா ஆகியோர் அடங்குவர்.

பால் வீலன் உளவு பார்த்ததற்காக மாஸ்கோ ஹோட்டலில் இருந்து 2018-இல் ரஷ்யாவால் கைது செய்யப்பட்டார்.

ரஷ்ய ராணுவம் குறித்து போலி செய்தி பரப்பியதற்காக வானொலி செய்தியாளர் அல்சோ கைது செய்யப்பட்டார்.

ரஷ்யாவிற்கு புறப்பட்ட மொத்தம் 10 கைதிகள்
2 சிறார்கள் உட்பட 10 ரஷ்ய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் பலர் ரஷ்யாவின் உளவுத்துறை நிறுவனமான FSB உடன் தொடர்புடையவர்கள்.

அவர்களில் ஒரு ரஷ்ய குடிமகன் வாடிம் கிராசிகோவ் ஆவார், அவர் ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் இருந்து அங்காராவுக்கு கொண்டு வரப்பட்டார்.

வாடிம் 2019-இல் பெர்லினில் ரஷ்யாவின் எதிரியை சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இது தவிர அமெரிக்க சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3 ரஷ்ய கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.