;
Athirady Tamil News

யாழில். திரைப்பட பாணியில் வங்கியில் மோசடி – மூவர் கைது கைது

0

திரைப்பட பாணியில் நபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து 65 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடியாக தமது வங்கி கணக்கிலக்கத்திற்கு மாற்றிய பெண் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைகளில் பின்னர் யாழ் .நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை முற்படுத்திய போது , மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாடு அனுப்பவதாக விளம்பரம்

ஆலோசனை கட்டணம் தவிர வேறு வித கட்டணங்கள் இன்றி வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான விளம்பரம் ஒன்றினை நம்பி யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , விளம்பரத்தில் காணப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தொலைபேசியில் , வெளிநாடு செல்வதற்கு உரிய ஆலோசனைகளை கூறியவர்கள் , அடையாள அட்டை , கடவுசீட்டு உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை பிரதி எடுத்து அதனை தமக்கு அனுப்பி வைக்குமாறும், உங்களுடைய வங்கி கணக்கில் பெருந்தொகையை வைப்பிலிட்டு , வங்கி மீதியை பேணுமாறு கூறி , வங்கி மீதியை தமக்கு அறிவுக்குமாறும் கூறியுள்ளனர்.

அவர்கள் கோரியதன் அடிப்படையில் அனைத்து ஆவணங்களையும் , அனுப்பி வைத்த இளைஞன் வங்கியில் பெருந்தொகை பணத்தினை தனது கணக்கில் வைப்பிலிட்ட இளைஞன் , வங்கி செயலியில் கணக்கு மீதியை ஸ்கிரீன் சொட் எடுத்து அதனையும் அனுப்பி வைத்துள்ளார்.

செயலிழந்த தொலைபேசி இலக்கம்

இந்நிலையில் ஒருநாள் இளைஞனின் தொலைபேசி இலக்கம் திடீரென செயலிழந்துள்ளது. தனது இலக்கம் திடீரென செயலிழந்தமைக்கான காரணம் தெரியாது மறுநாள் தனது தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்திற்கு சென்று புதிய சிம் ஒன்றினை பெற்றுக்கொண்டுள்ளார்.

சில நாட்களின் பின்னர் வங்கிக்கு சென்று தனது கணக்கு மீதியை சரி பார்த்த போது , தனது கணக்கில் இருந்து 65 இலட்ச ரூபாய் பணம் பிறிதொரு கணக்குக்கு ஒன்லைன் மூலமாக மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ் .மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணைகள் ஆரம்பம்

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , இளைஞனின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றம் செய்யப்பட்ட கணக்கு இலக்கத்திற்கு உரிய பெண்ணை கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரு ஆண்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்,

OTP இலக்கத்தை பெற E சிம் பெற்ற கில்லாடிகள்

இளைஞனின் வங்கி கணக்கில் இருந்து ஒன்லைன் மூலமாக பணத்தினை பிறிதொரு கணக்குக்கு மாற்றுவதாயின் இளைஞனின் தொலைபேசிக்கு OTP நம்பர் வரும். அதனை தாம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக, கைது செய்யப்பட்டுள்ள பெண் , இளைஞனின் தொலைபேசி வலையமைப்புக்கு சென்று , குறித்த இளைஞன் தனது மருமகன் என கூறி, அவர் தற்போது தாய்லாந்தில் வசிப்பதாகவும் , அதனால் , இந்த இலக்கத்தை E சிம் ஆக மாற்றம் செய்து தருமாறு கோரியுள்ளார்

நிறுவன ஊழியர்களுடன் , தாய்லாந்து தொலைபேசி இலக்கத்தில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு , தன்னை குறித்த இளைஞனாக அறிமுகம் செய்து உரையாடியுள்ளார்.

நிறுவன ஊழியர்கள் அடையாள அட்டை பிரதி கேட்ட போது , இளைஞனால் தமக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை பிரதியை மோசடியாக வழங்கி நிறுவனத்திடம் இருந்து E சிம் பெற்றுள்ளனர். (E சிம் இவர்கள் பெற்றமையால் தான், பாதிக்கப்பட்ட இளைஞனின் தொலைபேசி இலக்கம் செயலிழந்தது)

OTP இலக்கத்தை பெற்று மோசடி

E சிம்மை பெற்றவர்கள், இளைஞன் அவர்களிடம் வழங்கிய அடையாள அட்டை பிரதியின் ஊடாக இளைஞனின் அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி , இளைஞனின் வங்கி கணக்கினுள் ஊடுருவி பணத்தினை பிறிதொரு கணக்குக்கு மாற்றி உள்ளனர்

வங்கி கணக்கினுள் செல்வதற்கு , மற்றும் பணத்தினை பிறிதொரு கணக்குக்கு மாற்றம் செய்வதற்கு, OTP நம்பர், இவர்கள் தம் வசம் வைத்திருந்த பாதிக்கப்பட்ட இளைஞனின் தொலைபேசி இலக்கத்திற்கு வந்தமையால் இவர்கள் அதனை மோசடியாக பணத்தினை மாற்றம் செய்துள்ளனர்.

20ஆம் திகதி வரையில் விளக்கமறியல்

விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் மூவரையும் யாழ் .நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய போது, மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.