;
Athirady Tamil News

மத்திய கிழக்கு நாடொன்றின் புதிய சட்டம்… புறக்கணித்த பிரித்தானிய மக்கள் சுற்றுலா திட்டமும் ரத்து செய்ய முடிவு

0

மத்திய கிழக்கு நாடான துருக்கியின் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்திற்கு எதிராக ஒன்று திரண்டுள்ள பிரித்தானிய சுற்றுலா பயணிகள், அந்த நாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதுடன், சுற்றுலா பயணங்களையும் ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டம் அனுமதிக்கவில்லை
துருக்கியில் தெருநாய்களின் தொல்லை பெருகி வந்ததை அடுத்து, அந்த நாடு புதிய சட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. அதாவது தெருநாய்களை கண்டதும் கொல்ல துருக்கி அரசாங்கம் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், அனைத்து தெருநாய்களையும் கொல்ல சட்டம் அனுமதிக்கவில்லை. தெருக்களில் நாய்களின் நடமாட்டத்தை குறைக்க, அவைகளை பிடித்து, உரிய காப்பகங்களில் ஒப்படைக்க உள்ளனர்.

ஆனால் ஆக்கிரமிக்கும் குணம் கொண்ட அல்லது குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்கள் கருணைக்கொலை செய்யப்படும் என்றே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கி தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களுக்கு அவைகளால் பாதிப்பும், போக்குவரத்து இடையூறும், நோய் பரவுதலும் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில் துருக்கி தெருக்களில் 4 மில்லியன் தெருநாய்கள் காணப்படுகின்றன. தெருநாய்களை கொல்ல துருக்கி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இரக்கமில்லாமல் இயற்றியுள்ள சட்டம்
2023 நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த நாளை இன்னும் நினைவிருக்கிறதா? என துருக்கி ஜனாதிபதி எர்டோகனை கேள்வி எழுப்பியுள்ள சமூக ஊடக பயனர் ஒருவர், அப்போது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மோப்ப நாய்களே பேருதவி புரிந்தது என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், திரு எர்டோகன் நீங்கள் மனிதராக இருந்தால், இப்போதே அந்த கொடூர நடவடிக்கையை ரத்து செய்யுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவர், துருக்கி அருமையான நாடு, 2025ல் செல்ல இருந்தேன், ஆனால் துருக்கியின் ஜனாதிபதி இரக்கமில்லாமல் இயற்றியுள்ள சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பயணத்தை ரத்து செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெருநாய்களை கொல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், துருக்கியின் கொடூர குணம் கொண்ட மக்களில் சிலர் தெரு நாய்களுக்கு விஷம் வைப்பதாக ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.