;
Athirady Tamil News

சப்ஸ்கிரைபர்களை அதிகரிக்க யூடியூபர் எடுத்த வீடியோ… விசாரணையில் திடீர் அந்த பல்ட்டி… நடந்தது என்ன?

0

தெலங்கானாவில் மயில் கறி சமைப்பது எப்படி என வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமையல் என்பதும் ஒரு கலை, என மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளதால், அதுவே இன்றைய நவீன உலகில் மிகப்பெரிய பிஸினசாக மாறியுள்ளது. 5 ஸ்டார் ஓட்டல் தொடங்கி கிராமங்களில் வயல்வெளியில் சமைப்பது வரை அனைத்தும் வீடியோவாக வெளியிட்டு, சமையல் கலைஞர்கள் உலக அளவில் பிரபலமாகி வருகின்றனர். சைவ உணவு முதல், அசைவ உணவுகளில் ஆட்டுக்கறி குழம்பு, சிக்கன் குழம்பு, பாயா, பிரியாணி என விதவிதமான வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

தெலங்கானாவில் அப்படியொரு சமையல் பிரியர், பாரம்பரிய உணவுகளை சமைத்து பிரபலமாகியுள்ளார். அப்பேற்பட்ட யூடியூபர், வில்லங்கமான கறியை சமைத்து காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். அப்படி அவர் என்னதான் செய்தார்?

தெலங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோடம் பிரணாய் குமார். இவர், பாராம்பரிய உணவுகளை சமைத்து, தனது யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். விதவிதமாக அசைவ உணவுகளை சமைத்து, பார்ப்பவர்களின் நாவில் எச்சில் ஊற வைக்கும் அளவிற்கு அதன் ருசியை விளக்கி கூறுவார்.

உணவுகளை சமைத்து வீடியோ வெளியிட்டு வந்தவர், திடீரென சர்ச்சைக்குரிய வீடியோவை யூடியூப்பில் பதிவிட்டு வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார். அந்த வீடியோவில் நீங்கள் பார்ப்பது மயில் கறி என்றும், அதை எப்படி சுவையாக சமைக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். பிரபல யூடியூபரான பிரணாய் குமாருக்கு, மயில் தேசிய பறவை என்றும், அதை எப்படி அடித்து குழம்பு வைக்கலாம் என்பதும் தெரியாதா என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டதை உணர்ந்த பிரணாய் குமார், உடனடியாக அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இணைய உலகையை சுற்றி வந்த சர்ச்சை வீடியோ, உள்ளூர் போலீஸ் கண்ணில் படாமலா போயிருக்கும்.

விஷயம் தங்களது கவனத்திற்கு வந்ததும், யூடியூபர் பிரணாய் குமாரை தேடிச் சென்று கைது செய்தனர். அவர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வீடியோ வெளியிடுவதற்காக சமைத்த கறிக் குழம்பையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில், தான் மயிலை அடித்து குழம்பு வைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மாறாக கோழிக்கறியை சமைத்து, அதைத் தான் மயில் கறி என்று வீடியோ வெளியிட்டதாக கூறி அந்தர்பல்டி அடித்துள்ளார். யூடியூப்பில் லைக்ஸ் அள்ளவும், வியூஸ் மற்றும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவிட்டதாக கூறியுள்ளார்.

இதற்காகவே, சுவையான முறையில் மயில் இறைச்சி சமைப்பது எப்படி என்று தலைப்பில் வீடியோ வெளியிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து, அவரை வெளியே விட்ட போலீசார், வீடியோவுக்காக சமைத்த குழம்பின் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

யூடியூபர் பிரணாய், சப்ஸ்கிரைபர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் அவ்வப்போது சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். முன்னதாக காட்டுப் பன்றி கறியை சமைப்பது எப்படி என்று வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மயில் கறி விவகாரத்தில், யூடியூபர் பிரணாய் குமார் சமைத்தது கோழிக் கறியா அல்லது மயில் கறியா என்பது, ஆய்வு முடிவில் தான் தெரியவரும். அதை பொருத்தே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.