;
Athirady Tamil News

அதிகரித்து வரும் தடுப்பூசி தட்டுப்பாடு: குற்றம் சுமத்தும் வைத்தியர்கள்

0

நாட்டின் மருத்துவமனை அமைப்பில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

இதனால் நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், மயக்கமடைந்த பின்னர் சுயநினைவை மீட்டெடுக்கும் நியோஸ்டிக்மைன் தடுப்பூசி மருந்து அனேகமான வைத்தியசாலைகளுக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை
மேலும், மயக்க நிலையடைய பயன்படுத்தப்படும் லிக்னோகைன் தடுப்பூசி மற்றும் மஞ்சள் காமாலையை தடுக்க நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

அவசர இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற பல அத்தியாவசிய மருந்துகள் மருத்துவமனைகளில் உள்ளன. அவை தற்போது தீர்ந்துவிட்டது என ஜி.ஜி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஜி.விஜேசூரிய கூறுகையில், தற்போது பல தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் 13ஆம் திகதி புதிய தடுப்பூசிகள் கையிருப்பில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.