;
Athirady Tamil News

மன்னாரில் உயிரிழந்த இளம் குடும்பபெண் விவகாரம்: வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை

0

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் குடும்பபெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

விசரணை நடவடிக்கை

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏற்கனவே நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்குமே இவ்வாறு பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எனினும் இதுவரையில் குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் நேற்றைய தினமும் (20) மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.