;
Athirady Tamil News

மருத்துவமனையின் மூத்த அதிகாரிகள் மூவா் பணியிட மாற்றம்

0

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட ஆா்.ஜி.கா் மருத்துவமனையின் மூன்ற மூத்த அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இந்த சம்பவத்தைத் தொடா்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சந்தீப் கோஷ், தற்போது கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பதவியிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என்று மாநில சுகாதாரத் துறைச் செயலா் என்.எஸ்.நிகாம் தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவா்களின் இந்தக் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. ‘மருத்துவமனை சேவையில் சுமுக நிலை திரும்ப வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இளம் மருத்துவா்களின் கோரிக்கையை ஏற்று சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றும் நிகாம் தெரிவித்தாா்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட சுஹ்ரிதா பால் பா்சத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக குமாா் பந்தோபாத்யாய நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாஜக போராட்டம்: இதனிடையே, உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கோரி கொல்கத்தாவில் உள்ள மாநில சுகாதார அமைச்சகத்தை நோக்கி பாஜகவினா் வியாழக்கிழமை கண்டன பேரணி நடத்தினா். அவா்களை போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.