;
Athirady Tamil News

தவளை போல் கட்சி தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கை: நாமல் சீற்றம்

0

தேர்தல் காலத்தில் வரப்பிரசாதம் மற்றும் தனிப்பட்ட இலாபம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தவளை போல் கட்சியை விட்டு பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சி தாவல்களில் ஈடுபடுபவர்களுக்கு உயர்நீதிமன்றம் அண்மைக் காலமாக வழங்கிய தீர்ப்புக்களை வரவேற்கிறேன் எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை (Hambantota) பகுதியில் இன்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றி
அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசியல்வாதிகள் எம்மை விட்டுச் சென்றாலும் மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்பதை எமது முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளோம்.

அடிமட்ட மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம். நபர்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை. கொள்கைகளை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறோம். நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. என்பதில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

தேர்தல் வெற்றிக்காகப் பொய்யான வாக்குறுதிகளை எத்தரப்பினருக்கும் வழங்கப் போவதில்லை. அபிவிருத்தித் திட்டங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.