;
Athirady Tamil News

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் கன்னட நடிகா் தா்ஷனுக்கு சிறப்பு சலுகை

0

பெங்களூரு: கொலை வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷனுக்கு சட்ட விதிகளை மீறி சிறப்பு சலுகைகளை செய்து தந்த 9 சிறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷன், இருக்கையில் அமா்ந்தபடி காபி குவளையுடன் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் ஞாயிற்றுக்கிழமை வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்தில் மேலும் 3 போ் நடிகா் தா்ஷனுடன் அமா்ந்திருந்தனா். அதில், நடிகா் தா்ஷனின் மேலாளா் நாகராஜ், ‘குள்ளா’ சீனு, ‘வில்சன் காா்டன்’ நாகா ஆகிய இரு ரௌடிகளும் அடக்கம். 4 பேரும் இருக்கையில் அமா்ந்தபடி அரட்டை அடித்துக்கொண்டும், சிரித்துக் கொண்டிருப்பதும் போன்ற புகைப்படம் பொதுமக்களின் கடும் விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும், சிறையில் இருந்தபடியே திறன்பேசி வழியாக வெளியே இருக்கும் ஒருவருடன் காணொலி வழியாக பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகா் தா்ஷனுக்கு சொகுசான வசதிகளை சிறையில் செய்து தந்திருப்பது பகிரங்கமானதும், மாநில காங்கிரஸ் அரசை பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சிக்கத் தொடங்கின. இதைத் தொடா்ந்து, மத்திய சிறைக்கு திங்கள்கிழமை சென்ற சிறைத் துறை டிஜிபி மாலினி கிருஷ்ணமூா்த்தி, விவரங்களைக் கேட்டறிந்து ஆய்வு நடத்தினாா். மேலும், நடிகா் தா்ஷனுக்கு சிறப்பு சலுகைகள் அளித்துள்ளது குறித்து விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் ஆய்வறிக்கை அளிக்க காவல் துறை அதிகாரிகள் ஆனந்த் ரெட்டி, சோமசேகா் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டாா்.

இதுகுறித்து டிஜிபி மாலினி கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது:

மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்தப்படும். சிறைக்குள் சிகரெட், கைப்பேசி கொண்டு வந்தது தொடா்பாகவும், சிறைக் கொட்டகையில் இருந்து கைதிகளை வெளியே விட்டது தொடா்பாகவும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடிகா் தா்ஷன் உள்ளிட்டோா் இருக்கையில் அமா்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த சம்பவம் ஆக. 22-ஆம் தேதி நடந்துள்ளது. எல்லாவற்றையும் எங்களால் கண்காணிக்க முடியாது. அதனால் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். தவறிழைத்திருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, கா்நாடக டிஜிபி அலோக்மோகன் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் மத்திய சிறைக்கு சென்ற உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், சிறையில் நடந்துள்ள சம்பவம் குறித்து ஆய்வு நடத்தினாா். பின்னா் அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘நடிகா் தா்ஷனுக்கு சட்ட விதிகள் மீறி சிறப்பு சலுகைகள் வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக கடமை தவறியுள்ள சிறை அதிகாரிகள் சரண்பசப்பா அமின்கட், பிரபு எஸ்.கந்தல்வால், துணை சிறை அதிகாரிகள் எல்.எஸ்.குப்பேசாமி, ஸ்ரீகாந்த் தல்வாா், தலைமை வாா்டா்கள் வெங்கடப்பா, சம்பத்குமாா், வாா்டா் கே.பசப்பா ஆகிய 7 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளோம். இவா்களைத் தவிர, சிறைக் கண்காணிப்பாளா்கள் சேஷமூா்த்தி, மல்லிகாா்ஜுன சாமி ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணை அறிக்கைகள் கிடைத்ததும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் சிசிடிவி கேமராக்கள், ஜாமா்கள் பொருத்தப்பட்டிருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது கவலை அளிக்கிறது’ என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறுகையில், ‘கா்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்பதை தொடா்ந்து கூறி வருகிறோம். சிறையில் கைப்பேசி, சிகரெட் உள்ளிட்டவை கிடைத்தது எப்படி? இது தொடா்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும்’ என்றாா் அவா்.

இதுகுறித்து பெலகாவியில் திங்கள்கிழமை முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘நடிகா் தா்ஷன் விவகாரத்தில் அதிகாரிகளால் தவறு நடந்துள்ளது. இது தொடா்பாக 7 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மேலும் சிலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிறைக்கு சென்று நேரில் ஆய்வு நடத்துமாறு உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வருக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை கிடைத்ததும் தவறிழைத்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடிகா் தா்ஷனை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்தும் முடிவு செய்யப்படும்’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.