;
Athirady Tamil News

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் கொடுப்போம்-நன்றிக்கடனுக்காக அவரை ஆதரிக்கின்றோம்(video)

0
video link-

ரணில் விக்ரமசிங்கவினை நன்றிக்கடனுக்காக வட கிழக்கில் வாழும் கூடுதலான மக்கள் ஆதரிக்கின்றனர்.நாங்களும் இந்த பாதையில் சென்று தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதன் ஊடாக வளமான நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைமைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(1) ஜனாதிபதி தேர்தல் மற்றும் சமகால அரசியல் நிலைமை தொடர்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

வட கிழக்கினை பொறுத்த மட்டில் கூடுதலான மக்கள் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரிக்கின்றனர்.எனவே நாங்களும் இந்த பாதையில் சென்று தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதே நன்று என கூறுகின்றோம்.நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படவில்லை.35 வருடங்களுக்கு மேலாக வட கிழக்கு மக்களுக்காக குரல் கொடுத்து வந்திருக்கின்றோம்.உழைக்கும் தொழிலாளர்களுக்கு கைகொடுத்து இருக்கின்றோம்.நாங்கள் எமது நாட்டை இன்னும் 5 வருடங்கள் சரியான முறையில் கொண்டு சென்றால் தான் நாடு சிறப்பாக வரும்.இதனூடாக எமது இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு பெருகும்.ஏனைய அபிவிருத்திகள். இடம்பெறும்.இது தவிர தற்போதைய ஜனாதிபதி அவர்கள் கடந்த 2 வருடங்களாக தனது திறமையினை மக்களுக்கு காட்டி இருக்கின்றார்.அவரது நோக்கம் தெளிவானது எனவே நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அத்துடன் எமக்கு இனப்பிரச்சினை ,அரசியல் தீர்வு என்பன இருக்கின்றது தான்.இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை.அதை நாங்கள் எதிர்காலத்தில் ரணில் விக்ரமசிங்க வந்த பின்னர் பேச்சுவார்த்தை மூலம் நாங்கள் தீர்த்து கொள்ளலாம்.நாடு வளமாக இருந்தால் தான் எந்த பிரச்சினைகளையும் கதைக்க முடியும்.அதற்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும்.நாடு சீராகாமல் எந்தவொரு அதிகார பகிர்வையும் எம்மால் அவரிடம் கேட்க முடியாது.இந்த நாட்டை வளப்படுத்த வேண்டுமாயின் தற்போதைய ஜனாதிபதி ரணிலால் தான் முடியும்.அனுர குமார சஜீத் ஆகியோரால் இவ்விடயத்தை செய்ய முடியாது.ஏனெனில் அவர்களுக்கு காலம் இருக்கின்றது.

எனவே அனுபவம் வாய்ந்த முதிர்ச்சியுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் கொடுப்போம்.மக்கள் ஆணையை அவருக்கு கொடுப்போம்.அவ்வாறு இல்லாமல் வேறு கட்சிகளுக்கு பின்னால் சென்று எமது காலத்தையும் நேரத்தையும் வீணாக்க வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கின்றேன்.தற்போதைய ஜனாதிபதி நாட்டில் பல தடவை பிரதமராக இருந்தவர்.அனுபவம் உள்ளவர்.உலக நாட்டு தலைவர்களுக்கெல்லாம் அவர் பரிட்சயமானவர்.ஆனால் சஜீத் மற்றும் அனுரவிற்கு வல்லரசு நாட்டு தலைவர்களுடன் அறிமுகமில்லை.

இன்று 2 வருடங்களுக்கு பின்னர் நாடு சீராக சென்று கொண்டிருக்கின்றது.எனவே வளமான நாட்டை கொண்டு சென்ற தலைவருக்கு நன்றி கடன் செலுத்தும் கடப்பாடும் எங்களுக்கு இருக்கின்றது.அதை தான் மக்களும் சிந்திக்கின்றனர்.இந்த நாடு பாரிய நெருக்கடியில் இருந்த வேளை ரணில் விக்ரமசிங்க அவர்கள் பொறுப் பேற்றிருந்தார்.அவரின் திறமையினால் நாட்டை மீள வழமை நிலைக்கு கொண்டு சென்றார்.இன்னும் 5 வருடங்கள் புதியவரிடம் நாட்டை கொடுப்பதை விட தற்போதைய ஜனாதிபதி சரியாக செய்வதனால் அவருக்கு இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்குவோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.