;
Athirady Tamil News

அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு(video/photoes)

0
video link-

 

அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி அம்பாறை 188222 பேர், சம்மாந்துறை 99727 பேர், கல்முனை 82830 பேர், பொத்துவில் தொகுதியில் 184653 பேர் ஆகும்.இம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை (ஆசனங்கள்) 04 ஆகும்.

தபால் மூல வாக்களிப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27645 ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 26778 எனவும் 867 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனையதரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது.அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.இதேவேளை, வாக்காளர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறும், இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்குரிமையை பயன்படுத்துமாறும் இதன்போது அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையத்தில் செப்டம்பர் 21ம் திகதி காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்க முடியாது.

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு இதர ஆவணங்கள் விநியோகித்தல் நடவடிக்கைகள் அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் காலை 07 மணிக்கு ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.