பிரித்தானியாவில் கொட்டித்தீர்த்த மழை… பல மில்லியன் மக்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை
பிரித்தானியாவின் சில பகுதிகளில் ஒரு மாதத்துக்கு பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ளன.
இந்நிலையில், இன்றும், பல மில்லியன் மக்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரே நாளில் கொட்டித் தீர்த்த மழை
நேற்று ஞாயிற்றுக்கிழமை, கனமழை காரணமாக லண்டன் முதலான பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.
சில இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ரயில் சிக்னல் அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆம்பர் எச்சரிக்கை
மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்துக்கு ஆம்பர் எச்சரிக்கையும், மீதமுள்ள பகுதிகளுக்கு மஞ்சள் மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை உள்ளூர் நேரப்படி இன்று இரவு 9.00 மணி வரைக்கும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் ஏஜன்சி, லண்டனின் சில பகுதிகள் உடபட, இங்கிலாந்துக்கு 13 பெருவெள்ள எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.
பல இடங்களில், 60 முதல் 80 மில்லிமீற்றர் வரையும், சில இடங்களில் 120 மில்லிமீற்றர் வரையும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் பெருவெள்ளம், போக்குவரத்தில் பாதிப்பு, மின்னல் தாக்குதல், மின்வெட்டு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ள வானிலை ஆராய்ச்சிமையம், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.