;
Athirady Tamil News

புதியவரிடம் பொதுச்செயலாளர் பதவியை கையளிக்கத் தயாராகும் ரில்வின் சில்வா

0

நான் சாகும் வரை ஜே.வி.பிகாரன்தான். இதில் மாற்றம் எதுவும் வராது. ஆனால், மரணிக்கும் வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்றில்லை. பொதுச்செயலாளர் பதவியை மற்றுமொரு புதியவர் ஒருவருக்கு வழங்க எதிர்பார்த்துள்ளேன் என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
பொதுத்தேர்தல் முடிந்ததும், அடுத்த வருடம் கட்சி மாநாட்டை நடத்தி இதற்குரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.

1978 ஆம் ஆண்டு ஜே.வி.பியில் இணைந்த ரில்வின் சில்வா, 1995 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை 29 வருடங்களாக அந்தப் பதவியில் அவர் நீடிக்கின்றார்.

கட்சி செயற்பாடுகள் காரணமாக சிறைவாசமும் அவர் அனுபவித்துள்ளார். ஜே.வி.பிக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, அக்கட்சியினர் ஜனநாயக வழிக்குத் திரும்பிய பின்னர், கட்சியை மீளக் கட்டியெழுப்புவதில் ரில்வின் சில்வாவின் பங்களிப்பு அளப்பரியது.

ஜே.வி.பி. அரசியல் ரீதியாகப் பின்னடைவுகளைச் சந்தித்த வேளைகளில் கட்சி தோழர்களை உற்சாகப்படுத்தி கட்சியை ஒரு கட்டுப்கோப்பாக வழிநடத்தியவர்களில் ரில்வின் சில்வா பிரதானமானவர்.

ஜே.வி.பிக்குள் உள்ளக மோதல்கள் வெடித்த சந்தர்ப்பங்களில் கட்சி கட்டமைப்பு சிதைவடையக்கூடாது என்பதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர்.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது . ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகியுள்ளார். இந்நிலையில் அநுரவைப் போலவே பலரும் ரில்வின் சில்வாவைப் பற்றியும் தேட ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் அவர் தனது கடந்த காலம் பற்றியும் விபரித்துள்ளார்.

இதன்போது இன்னும் எத்தனை வருடங்கள் ஜே.வி.பியின் பிரதான செயலாளராக இருக்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது,

இதற்கு பதிலளித்த அவர், “நான் சாகும்வரை ஜே.வி.பிகாரன்தான். உடலில் உயிர் இருக்கும் வரை அரசியலிலும் ஈடுபடுவேன். ஆனால், மரணிக்கும் வரை பதவி வகிக்க வேண்டும் என்றில்லை. நீண்ட காலம் பொதுச்செயலாளர் பதவியில் இருந்துவிட்டேன். புதியவர் வரவேண்டும் எனக் கருதுகின்றேன்.

உடனடி மாற்றத்தை கட்சி தோழர்கள் விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, மாநாட்டை நடத்தி இதனைச் செய்யலாம். சிறப்பாகச் செயற்படக்கூடிய தோழர்கள் உள்ளனர் என்றார் ரில்வின் சில்வா.

அதேவேளை, அரசில் எவ்வித பதவியையும் தான் ஏற்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.