;
Athirady Tamil News

ஜனாதிபதியை சந்தித்துள்ள சந்தோஷ் ஜா: இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது, இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், பிராந்தியத்தில் அமைதியான மற்றும் நிலையான நாடாக இலங்கை வெளிப்படுவதை காண்பதே தமது நாட்டின் எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீண்டகால நட்புறவு
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர், அண்டைய சகோதர நாடுகள் என்றவகையில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான மற்றும் நிலையான நட்பைப் பேணி முன்னேறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஊழலுக்கு எதிராக திறம்பட போராடுவதற்கு அரசாங்க கட்டமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திட்டத்தையும் பாராட்டினார்.

மேலும், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.

உத்தியோகபூர்வ விஜயம்
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எதிர்வரும் 4ஆம் திகதி அவர் இலங்கைக்கு அவர் வருகைத்தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதன் பின்னர் இந்திய அமைச்சர் ஒருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.