;
Athirady Tamil News

நெருங்கும் மில்டன் புயல்… நீங்கள் இறக்கப் போகிறீர்கள்: புளோரிடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கவிருக்கும் நிலையில், வெளியேற மறுக்கும் மக்கள் கட்டாயம் மரணத்தை சந்திப்பீர்கள் என தம்பா மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரணத்தை எதிர்கொள்வார்கள்
புளோரிடா மாகாணத்தின் மேற்குக் கரையோர மக்கள் செவ்வாயன்று மில்டன் சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

சூறாவளியில் சிக்காமல் இருக்க ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேறியதால், பிரதான சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இந்த நிலையில், வெளியேறும் உத்தரவுக்கு பதிலளிக்க மறுக்கும் மக்கள், கண்டிப்பாக மரணத்தை எதிர்கொள்வார்கள் என தம்பா மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மில்டன் புயலானது மெக்சிகன் நகரமான மெரிடாவைக் கடந்து புளோரிடாவை அணுகி வடக்கே அமெரிக்காவை நோக்கி நகர்வதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 250 கி.மீற்றர் என இருக்கும் என்றும் புயலின் தாக்கம் 15 அடி வரையில் இருக்க வாய்ப்புள்ளதாகவும், மேற்கு-மத்திய புளோரிடாவில் பதிவாகியுள்ள மிக அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாக மில்டன் இருக்கும் என்றும் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இது மிகவும் கடுமையான அச்சுறுத்தல் மற்றும் புளோரிடாவில் வசிப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு செவிசாய்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அழிவை ஏற்படுத்தக்கூடும்

இதனிடையே, மில்டன் சூறாவளியானது கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவில் வீசும் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மில்டன் சூறாவளியானது புளோரிடாவின் தென்மேற்கு கடற்கரையை உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலைக்குள் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹெலேன் சூறாவளியின் பேரழிவிலிருந்து ஏற்கனவே தத்தளிக்கும் பகுதிகளில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

புளோரிடாவின் மேற்குக் கரையோரப் பகுதிகள் அனைத்தும் சூறாவளி எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வெளியேற்றுமாறு கூறப்பட்டுள்ளது.

3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தம்பா விரிகுடா பகுதியில் மில்டன் புயல் கரையைக் கடக்கும் என்றே கூறப்படுகிறது. 1921 ஆம் ஆண்டிலிருந்து தம்பா பகுதியானது ஒரு பெரிய சூறாவளியால் நேரடியாகத் தாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.