;
Athirady Tamil News

ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை! மக்கள் அஞ்சலி

0

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்கில் வைக்கப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் உடலுக்கு இன்று மாலை 4 மணிவரை மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

அரசு மரியாதை

ரத்தன் டாடாவின் உடல் நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து மும்பை கொலாபாவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் மக்களின் அஞ்சலிக்காக என்சிபிஏ அரங்குக்கு பலத்த பாதுகாப்புடன் ரத்தன் டாடா உடல் கொண்டு வரப்பட்டது.

ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்ட ரத்தன் டாடாவின் உடல் மீது தேசியக் கொடி போற்றப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதி சடங்கு எப்போது?

என்சிபிஏ அரங்கில் மாலை 4 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படும் நிலையில், அதன்பிறகு வோர்லி மயானத்தில் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசின் முழு மரியாதை ரத்தன் டாடாவின் உடலுக்கு வழங்கப்படவுள்ளது.

ரத்தன் டாடா மறைவு

முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இல்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், புதன்கிழமை இரவு அவர் உயிரிழந்ததாக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.