;
Athirady Tamil News

கனவுகள் மூலம் ஒருவருடன் பேச முடியுமா? – சாதனை படைத்த விஞ்ஞானிகள்

0

கனவுகள் மூலம் மற்றொருவரை தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கனவுகள்

ஆசைப்பட்ட விஷயங்கள் உறக்கத்தின் போது சிலருக்கு கனவில் வரும். ஆனால் கனவு முழுமை அடைவதற்குள் எழுந்து விடுவோம். இன்னும் கொஞ்ச நேரம் உறங்கி இருக்கலாம் என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும்.

ஒரு சிலருக்கு மோசமான கனவுகள் கூட வரும். அந்த கனவுகளை அவர்கள் மறக்கவே நினைப்பார்கள். விஞ்ஞானிகள் கனவு குறித்த ஆராய்ச்சியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கனவுகள் மூலம் மற்றொருவரை தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ரெம் நிலை
உறக்கத்தில் ‘ரெம்’ எனும் ஒரு கட்டம் உள்ளது. இந்த கட்டத்தில் நாம் காணும் கனவுகளை நம்மால் அடையாளம் காண முடியும். ஆனால் இதற்கு முறையான பயிற்சி அவசியம். இதன் மூலம் நாம் என்ன கனவு கண்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை அடையாளம் காண்பதோடு, கனவில் நமக்கு தேவையான சில மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும், REMspace எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த சோதனைக்காக ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து இருவருக்கும் கனவுகளை அடையாளம் காண பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சோதனையில், முதலில் ஆண் நபர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பின்னர் சில விநாடிகளில் ‘ரெம்’ நிலையை அடைந்துள்ளார். அப்போது அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க சில பிரத்யேக கருவிகள் அவரது உடலில் பொருத்தப்பட்டது.

5 வருட முயற்சி
ரெம் நிலையை அவர் அடைந்ததும், அவரது காதில் பொருத்தப்பட்டிருந்த ஹெட் போனுக்கு கம்ப்யூட்டரிலிருந்து ‘ரெமியோ’ என்னும் சிறப்பு கணினி மொழியில் ‘ஜிலாக்’ எனும் வார்த்தை அனுப்பப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை முதல் நபர் தனது கனவில் உச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து 8 நிமிடங்கள் கழித்து பெண் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று ரெம் நிலையை எட்டியுள்ளார். அதன்போது, முதல் நபர் கனவில் உச்சரித்த ‘ஜிலாக்’ எனும் வார்த்தையை அவரும் கேட்டிருக்கிறார். ஆனால் கணினியிலிருந்து அவருக்கு எந்த வார்த்தையும் அனுப்பப்படவில்லை.

இது குறித்து விளக்கிய ஆய்வாளர்கள், “இந்த ஆய்வு கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி இடம்பெற்றது. சுமார் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது. கனவை ஆய்வு செய்வதன் மூலம் ஒருவரின் உளவியலை நன்கு புரிந்து கொள்ள முடிவதோடு, மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்” என தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.