;
Athirady Tamil News

பிரித்தானியா கனவில் பயணப்பட்ட குடும்பம்… பிரான்சில் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்

0

பிறந்து 40 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று, ஆங்கில கால்வாயை கடக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை தவறி தண்ணீரில்

கூட்ட நெரிசல் காரணமாக படகு கவிழ்ந்த நிலையில், தந்தையின் கைகளில் இருந்து குழந்தை தவறி தண்ணீரில் விழுந்ததாகவே கூறப்படுகிறது. பிரித்தானியாவில் குடியேறும் கனவுடன் ஐரோப்பா வழியாக புறப்பட்டவர்கள் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த Maryam Bahez என்பவரின் குடும்பம்.

பயணத்தின் நடுவே குழந்தை Maryam Bahez பிறந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. பிரான்சின் விஸ்ஸான்ட் என்ற இடத்தில் இருந்து பிரித்தானியாவுக்கு புறப்படும் நோக்கில் குழந்தையின் பெற்றோரும் அவர்களது இரண்டு மூத்த மகன்களும் ஏறியபோது படகு ஏற்கனவே நிரம்பியிருந்தது.

பிறந்து வெறும் 40 நாட்களேயான குழந்தையை குப்பை சேகரிக்கும் பை ஒன்றால் சுற்றியிருந்தனர். படகு புறப்பட்டு 100 மீற்றர் கடந்திருக்கும், அப்போது கூட்ட நெரிசல் காரணமாக படகு தத்தளிக்கத் தொடங்கியுள்ளது.

இறந்துவிட்டதாக

ஒருகட்டத்தில் படகு கவிழ்ந்துள்ளது. படகு தத்தளிக்கத் தொடங்கியதும் கரைக்கு திரும்ப பலர் கூறியுள்ளனர். ஆனால் படகோட்டி அதை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த களேபரத்தில் குழந்தை தமது கையில் இருந்து தவறியதாக அந்த தந்தை தெரிவித்துள்ளார். இதனிடையே, படகு கவிழ்ந்து மக்கள் தத்தளிப்பதை கவனித்த பிரெஞ்சு கடலோர காவல்படை பல கப்பல்களையும் ஹெலிகொப்டரையும் அனுப்பி 65 பேரை மீட்டனர்.

ஆனால் சிறுமி மரியம் தண்ணீரில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கடும் துயரத்தை எதிர்கொண்டாலும், தமது இரு மகன்களையும் மனைவியையும் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்க முயன்று வருவதாக அந்த ஈராக்கியர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.