;
Athirady Tamil News

ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

0

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்பி ஆ. ராசா உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பு மற்றும் வலியுறுத்தலைத் தொடா்ந்து, மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை உறுப்பினா்களும், திமுக மாநிலங்களவை உறுப்பினா் முகமது அப்துல்லா உள்பட 10 மாநிலங்களவை உறுப்பினா்களும் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கூட்டுக்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டை முன்வைத்து ஆ. ராசா உள்பட 10 எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாண் பானர்ஜி, முகமது ஜவைத், அசாதுதீன் ஓவைசி, நாசிர் உசேன், மொஹிபுல்லா, எம். அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதிமுல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.