;
Athirady Tamil News

மதுரை: சாயக் கழிவுகளால் 14 மாடுகள் பலி!

0

மதுரையில் சாயப் பட்டறை கழிவுநீரை குடித்த 14 மாடுகள் பலியாகின.

மதுரை வில்லாபுரம், அவனியாபுரம், மண்டேலா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாயப் பட்டறைகளின் சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், கால்வாய்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இந்த நிலையில், கால்வாயிலும், விளைநிலங்களிலும் கலக்கும் சாயக் கழிவுநீரைக் குடிக்கும் மாடுகள் மட்டுமின்றி, பிற கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. சில கால்நடைகள் கழிவுநீரால் பலியும் ஆகின்றன.

மேலும், நிலத்தடி நீரையும் சாயக் கழிவுநீர் பாதிப்பதால், அப்பகுதியில் பயிர்விக்கப்படும் கீரைகள், கிழங்குகள், காய்கறிகளும் விஷத் தன்மையுடனே இருக்கக் கூடும். கழிவுநீரைத் திருப்பிவிடும் சாயப் பட்டறைகளின் இந்தச் செயல்களுக்கு விவசாயிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெருங்குடி பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 900 மாடுகளில், சாயக் கழிவுநீரைக் குடித்த 14 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. மேலும், 70 மாடுகள்வரையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கால்நடைத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்பட 18 பேர் கொண்ட குழு, சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.