;
Athirady Tamil News

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

0

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அதாவது அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமைய போகிறது. நாடாளுமன்றில் அநுர தரப்பு அதீத பெரும்பான்மையுடன் உள்ளது. அவர்களுக்கு எமது தரப்பின் ஆதரவு தேவையில்லை. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது ஒன்றிணைந்து வரவுள்ற ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும்.

அதற்காகவே தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, வரவுள்ள அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாட முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் நாம் சிந்திக்கவில்லை. தற்போது வரவுள்ள அரசியலமைப்பு எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பிலையே சிந்திக்கின்றோம்.

எங்கள் கட்சிகள் உறுப்பினர்கள் , கொள்கைகள் மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் பொதுவாக தமிழ் மக்களின் இருப்பை இல்லாதாக்கும் அரசியலமைப்பை தமிழ் மக்களாக நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

ஒற்றையாட்சி சிந்தனையோடு வரும் எந்த அரசியலமைப்பை ஏற்க முடியாது. சமஷ்டி தீர்வை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். சமஷ்டி என்பதில் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாக சமஷ்டி தீர்வாகவே தீர்வுத்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமானது, இதுவரையிலான தீர்வு திட்டங்களில் சிறப்பானது. அதனை வைத்து அதில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும். குறிப்பாக அதில் மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு, அதனை பூரணப்படுத்த வேண்டும். அவ்வாறு பூரணப்படுத்தப்பட்டால் அதனை தமிழர்களின் தீர்வு யோசனையாக முன் வைக்க முடியும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.