துறைமுக வளாக கப்பல் பழுதுபார்க்கும் தடாகத்தில் விழுந்த நபர்

கொழும்பு துறைமுக வளாக கப்பற்துறையில், பணிபுரிந்த ஒருவர் கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (31) இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள கப்பற்துறையில் துணை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த பரகஹவிட்ட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சுழியோடிகள் மூலம் அவர் வெளியே எடுக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் காலை உணவை அருந்திவிட்டு கைகளைக் கழுவுவதற்காக கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும் தடாகத்திற்கு சென்று திரும்பி வரும் வழியில் தடாகத்தில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.