;
Athirady Tamil News

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தங்க நகைக்காக கொல்லப்பட்ட பெண்

0

சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெருமதியான தங்க நகையை பறித்து கொள்வதற்காக பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

இரத்தினபுரி – வெவள்வத்த பொலிஸ் பிரிவில் கலபட பகுதியில் கருக பட்டை தோட்டத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கடந்த 31 திகதி மீட்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பன்னில, நிரி எல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அவர்களது மகனுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின் கலபட பகுதிக்கு வந்து தனியாருக்கு சொந்தமான ஓர் காணியில் தங்கியிருந்து அவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

நாளாந்தம் மாலை வேளையில் அந்த பெண்ணின் கணவர் கலபட சந்தியில் உள்ள வியாபர நிலையங்களுக்கு சென்று வருவார். கடந்த 30 ஆம் திகதி வழமையை போல் கலபட பகுதியில் உள்ள வியாபார நிலையத்திற்கு சென்று சில பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு திரும்பி வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த கணவர், நீராட தயாராகி கொண்டிருந்த நிலையில் அவரது மனைவியை காணவில்லை என்று அத்தோட்ட காவலாளியின் உதவியுடன் வீட்டை சுற்றி தேடியுள்ளார். வீட்டை சுற்றி தேடி கிடைக்காததால் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்த பின்னர் வெவள்வத்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள், அயலவர்களின் உதவியுடன் வீட்டு சுற்று வட்டாரத்தில் தேடி பார்த்த போது, வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள கருக பட்டை தோட்டத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

குறித்த பெண்ணின் சடலத்தை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் இரத்தினபுரி நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன், சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனைகளில் குறித்த பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட வெவள்வத்த பொலிஸார் அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாற்றிய நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க நகையை பறித்து கொள்வதற்காக குறித்த நபர் கொலை செய்துள்ளமை விசாரணையின்போது தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இறக்குவானை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

சந்தேக நபர் இறக்குவானை பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட ஓர் குற்றவாளி என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்று ஞாயிற்றுக்கிழமை (02) இரத்தினபுரி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.