வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் உதவித் தேர்தல் ஆணையாளர் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா

வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு வருடாந்த இடமாற்றம் மூலம் இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (24.02.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய
அரசாங்க அதிபர், எமது மாவட்டத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர் 06 ஆண்டுகள் பணியாற்றியவர் எனவும், நிதி, நிர்வாகம் தொடர்பாக பயிற்சி வகுப்புகள் மற்றும் தடைதாண்டல் பரீட்சைகளுக்கான வகுப்புக்களை நடாத்தி பல பேரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி புரிந்துள்ளார் எனவும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 04 தேர்தல்களை நடத்தியுள்ளார் எனவும் தாம் தெரிவத்தாட்சி அலுவலகராக கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் கடமையாற்றிய போது தம்முடன் பக்கபலமாகவிருந்து தேர்தல் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை மிகவும் நேர்த்தியாக கையாளுபவர் என பாராட்டு வழங்கிய அரசாங்க அதிபர் இவரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதேவேளை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் அவர்களினால் வாழ்த்துரை வழங்கப்பட்டதுடன் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களினாலும் வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது அரசாங்க அதிபர் அவர்களினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.