வீடியோ காலில் கணவர்… செல்போனுக்கு ‘புனித நீராடல்’ – இது கும்பமேளா வைரல்!

மகா கும்பமேளாவுக்கு வந்த பெண் ஒருவர், தனது கணவரை வீடியோ காலில் அழைத்து செல்போனை நீரில் மூழ்க வைத்து புனித நீராடல் நடத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா விழா சிறப்புற நடைபெற்று வந்தது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த மகா கும்பமேளாவில் பெண் ஒருவர் தனது கணவருடன் வீடியோ காலில் பேசியவாறு அந்த போனை நீரில் மூழ்கச் செய்து டிஜிட்டல் ஸ்னானம் செய்துள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ காலில் கணவர் பேசிக் கொண்டிருக்க அந்த செல்போனை, நீரில் 3 முறை முக்கி எடுத்து புனிதக் குளியல் நடத்தியுள்ளார் அந்தப் பெண்.
இது குறித்து சமூக வலைதளங்களில் ஒருவர் கூறும்போது, “இதுபோன்ற செயல்களால் நேரில் வந்து புனிதக் குளியல் செய்தது வீண் என்று அர்த்தமாகி விடுகிறது” என்றார். மற்றொருவர் கூறும்போது, “இந்த உலகில் முட்டாள்களுக்கு பஞ்சம் இல்லை என்று தெரிகிறது” என்றார்.
மற்றொரு பயனாளர், “புனித நீராடல் செய்துள்ளதால் உங்கள் கணவரின் ஆடைகள் நனைந்திருக்கும். அவரது ஆடையை மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.