;
Athirady Tamil News

லக்னௌ: பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

0

உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையாளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், சனிக்கிழமையில் சீதாபூர் அருகே லக்னௌ – தில்லி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பட்டப்பகலில் மற்றொரு வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் தள்ளி விட்டனர். இதனைத் தொடர்ந்து, கீழே விழுந்து கிடந்த ராகவேந்திராவின் தோளிலும், மார்பிலும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பியோடி விட்டனர்.

இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் ராகவேந்திராவை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகவேந்திராவின் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கூறியதாவது மஹோலி தாலுகாவில் நெல் கொள்முதல் மற்றும் நில ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அதனை வெளிக்கொண்டு வந்ததால், ராகவேந்திராவுக்கு கடந்த சில நாள்களாகவே அச்சுறுத்தல்கள் வந்தன.

இந்த கொலை சம்பவத்துக்கு முன்னதாகவும்கூட, ஒரு அழைப்பு வந்தவுடன்தான் ராகவேந்திரா வெளியே சென்றார். கொலை செய்த மர்ம கும்பல் மற்றும் கொலைக்கான பின்னணி குறித்து காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.