;
Athirady Tamil News

அமெரிக்கா: தரையிறங்கிய விமானத்தில் தீ! 172 பயணிகள் நிலை?

0

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவுகிறது.

முதல்கட்டமாக வெளியான தகவலின்படி, விமானத்தில் பயணித்த 172 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலராடோ ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் இருந்து டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 1006 புறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடுவானில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அவசர தரையிறக்கத்துக்கு கட்டுப்பாட்டு அறையினரை தொடர்பு கொண்டு விமானி அனுமதி கேட்டுள்ளார்.

இதையடுத்து, கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

தரையிறக்கப்பட்ட விமானம், சி38 நிறுத்திமிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது என்ஜின் பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. விமான நிலையம் முழுவதும் புகை மண்டலம் எழுந்த நிலையில் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக விரைந்து செயல்பட்ட விமான ஊழியர்கள் மற்றும் மீட்புப் பணியினர் 172 பயணிகளையும் பத்திரமாக மீட்டதாக அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதிய விபத்தில் 67 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.