;
Athirady Tamil News

இரக்கமின்றி… உக்ரைன் வீரர்கள் குறித்து முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி கடும் கோபம்

0

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் எஞ்சியிருக்கும் உக்ரைன் வீரர்கள் இரக்கமின்றி அழிக்கப்படுவார்கள் என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெத்வெதேவ் கொந்தளித்துள்ளார்.

உயிருடன் விட்டுவிட
குர்ஸ்க் பகுதியில் எஞ்சியிருக்கும் உக்ரைன் வீரர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, குர்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரைன் வீரர்களை உயிருடன் விட்டுவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

குர்ஸ்க் பகுதியில் நிலைமை சிக்கலாக இருப்பதாக ஒப்புக்கொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யா வெளியிட்டு வரும் கட்டுக்கதைகள் போல உக்ரைன் வீரர்கள் சுற்றி வளைக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் ட்ரம்பின் கோரிக்கைக்கு பதிலளித்த புடின், அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால், அவர்கள் பாதுகாப்பிற்கு தாம் உத்தரவாதம் அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ரஷ்ய பாதுகாப்பு சபை துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வெதேவ் தமது சமூக ஊடக பக்கத்தில் தெரிவிக்கையில், மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே ஆயுதங்களைக் கைவிட கோரிக்கை விடுத்து வருவதாகவும், அவர்கள் தொடர்ந்து போரிட முடிவு செய்தால், அவர்கள் மொத்தமாக ஈவு இரக்கமின்றி ஒழிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் கட்டுப்பாட்டில்
உக்ரைன் நிர்வாகம் எடுக்கும் முடிவு அந்த வீரர்களின் உயிரை விட்டு வைக்குமா என்பதை தெரியப்படுத்தும் என்றார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அதிரசியாக ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்த உக்ரைன் இராணுவம், மின்னல் வேகத்தில் பல கிராமங்களையும் கைப்பற்றியது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷ்யா இன்னொரு நாடால் தாக்குதலுக்கு இலக்கானது. சுமார் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் குர்ஸ்க் பிராந்தியம் பேசுபொருளாக மாறியுள்ளது.

குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பல கிராமங்களை ரஷ்யா கைப்பற்றி வருவதாகவே தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் எஞ்சியுள்ள உக்ரைன் வீரர்களுக்கு ரஷ்யா தரப்பில் கடும் அழுத்தமளிக்கப்படுவதுடன், அவர்களை அங்கிருந்து துரத்தும் தீவிர நடவடிக்கைகளிலும் ரஷ்யா களமிறங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.