;
Athirady Tamil News

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!

0

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா ஊடக அலுவலகம் சனிக்கிழமை(மார்ச் 15) தெரிவித்துள்ளது.

கடந்த ஜன. 19-ஆம் தேதி போர் நிறுத்தம் அமலாகிறது என்ற அறிவிப்பு வெளியானது. போர் நிறுத்தத்துக்காக முதல் கட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் மார்ச் முதல் வாரத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த இஸ்ரேல் முனைப்பு காட்டவில்லை. இதனையடுத்து, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் அரசுக்கும் ஹமாஸ் படைப் பிரிவுக்குமிடையே உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு காஸாவில் தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், அதனை ஏப்ரல் வரை நீட்டிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் காஸாவில் தாக்குதலை நடத்தி வருவது போர் நிறுத்த முயற்சியில் தடை கல்லாக மாறியிருக்கிறது.

இதனிடையே, காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள பீய்ட் லஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை(மார்ச் 15) வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில் பத்திரிகையாளர் ஒருவர் உள்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இஸ்ரேலின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச நீதிமன்றங்கள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று காஸா ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.