இளவரசர் ஹரி நாடுகடத்தப்படுவாரா? நீதிபதியின் முடிவால் மீண்டும் சிக்கல்…

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் பிரித்தானிய இளவரசர் ஹரி தனது சுயசரிதைப் புத்தகத்தில் தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறிய விடயம், மீண்டும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
ஹரி பொய் சொன்னாரா?
இளவரசர் ஹரி, தனது சுயசரிதைப் புத்தகமான ஸ்பேர் என்னும் புத்தகத்தில், தான் பலவித போதைப்பொருட்களை சோதித்துப் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில், அவருக்கு அமெரிக்காவில் வாழ விசா கொடுக்கப்பட்டிருக்கமுடியாது.
ஆக, அவர் விசா விண்ணப்பத்தில் தனது போதைப்பொருள் பயன்பாடு குறித்து பொய் சொன்னாரா என The Heritage Foundation என்னும் அமைப்பு கேள்வி எழுப்பிய விடயம் நீதிமன்றம் வரை சென்றது.
வழக்கை விசாரித்த Carl Nichols என்னும் நீதிபதி, இளவரசர் ஹரியின் விசா தொடர்பான ஆவணங்களை அவரது தனியுரிமை கருதி வெளியிட இயலாது என்று கூறியிருந்தார்.
நீதிமன்றத்தின் முடிவால் ஹரிக்கு மீண்டும் சிக்கல்…
இந்நிலையில், தற்போது நீதிபதி Nicholsஇன் முடிவில் மாற்றம் தெரிகிறது. ஆம், ஹரியின் விசா தொடர்பான ஆவணங்களை வெளியிடலாம் என தற்போது அவர் தெரிவித்துள்ளார்.
The Heritage Foundation, ஹரி தனது விசா விண்ணப்பத்தில் தான் போதைப்பொருள் பயன்படுத்திய விடயத்தை மறைத்துவிட்டாரா என்பதை அறிவதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஹரியின் விசா குறித்த ஆவணங்களை வெளியிட கோரியுள்ளது.
அதைத் தொடர்ந்து, நாளை, மார்ச் மாதம் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஹரியின் விசா தொடர்பான சில ஆவணங்களை வெளியிட நீதிபதி Nichols அறிவுறுத்தியுள்ளார்.
ஆகவே, ஹரி நாடுகடத்தப்படலாம் என்னும் ரீதியில் மீண்டும் செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.