;
Athirady Tamil News

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடல்!

0

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (மார்ச் 18) தெரிவித்துள்ளனர். அம்மாகாணத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்ளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இருப்பினும், பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதற்கான முழுமையான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த மார்ச் 11 அன்று பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மியை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டின் குவேட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற ஜாஃபர் அதிவிரைவு ரயிலை சிறைப்பிடித்தனர். இதில், அந்த ரயிலில் பயணித்த 25 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் மூலம் 30 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு 300க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாகிஸ்தான் நாட்டின் வளமிக்க மாகாணமான பலூசிஸ்தானின் பூர்வக்குடிகளான பலூச் இன மக்கள் பல தசாப்தங்களாக அவர்களது சொந்த நிலப்பரப்பில் அந்நாட்டு அரசினால் ஒதுக்கப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

அம்மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள், தங்களது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினரை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதுவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பலூசிஸ்தான் தேசியவாத அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள், அம்மாகாணத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக மாயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.