மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று… கனடாவை மீண்டும் வம்பிழுத்த டொனால்டு ட்ரம்ப்

சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவுடன் ஏன் கடுமையாக
வரலாற்று ரீதியாக நட்பு நாடுகளான கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
கனடா மீது அமெரிக்கா வரிகளை விதித்ததன் மூலம் வர்த்தகப் போர் தொடங்கியது, பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் வரிகளை விதித்தது. அத்துடன் கனடியர்கள் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிக்கவும் செய்தனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் ஃபாக்ஸ் நியூஸிடம் பேசுகையில், மற்ற பெரிய எதிரிகளை விட கனடாவுடன் அவர் ஏன் கடுமையாக இருக்கிறார் என்பதற்கான பதிலை ட்ரம்ப் அளித்துள்ளார்.
அதில், தாம் எல்லா நாடுகளுடனும், மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொள்வதாகவும், ஆனால் சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
அமெரிக்காவுக்குத் தேவையில்லை
மேலும், கனடாவிற்கு ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர் மானியம் வழங்கி வருவதாகவும், இதனால் கனடா 51வது மாகாணமாக இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து வரும் வர்த்தகப் போரைத் தவிர, ட்ரம்ப் கனடாவை தங்களது 51வது மாகாணம் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார், மேலும் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, கவர்னர் ட்ரூடோ என்றும் அடையாளப்படுத்தி வந்தார்.
மேலும், அவர்களுடைய மரக்கட்டைகள், மின்சாரம் எதுவும் அமெரிக்காவுக்குத் தேவையில்லை. அவர்களுடைய வாகனங்கள் அமெரிக்காவுக்கு நிச்சயமாகத் தேவையில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மிக சமீபத்தில் கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி, ட்ரம்புக்கு எதிராக துணிந்து செயல்படுவோம் என உறுதி அளித்திருந்தார்.