;
Athirady Tamil News

மூன்றாம் ஆண்டாக அதிகரித்த பன்முக கலாசார திருமணங்கள்!

0

தென் கொரியாவில் வெளிநாட்டினருடனான அந்நாட்டு மக்களின் திருமணங்கள் மூன்றாம் ஆண்டாக அதிகரித்துள்ளது.

தென்கொரியா நாட்டு மக்கள் வெளிநாட்டினரை திருமணம் செய்வது (பன்முக கலாசார திருமணம்) 2024ல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு புள்ளி விவரங்கள் நேற்று (மார்ச் 20) தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அந்நாட்டைச் சேர்ந்த யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 2023 ஆம் ஆண்டு 19,717 பன்முக கலாசார திருமணங்கள் நடைபெற்றிருந்த நிலையில் அதில் சுமார் 1,042 அதிகரித்து 2024 ஆம் ஆண்டில் 20,759 திருமணங்கள் பதிவாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காலத்தில் வெறும் 15,000 பன்முக கலாசார திருமணங்கள் நடைபெற்றிருந்த நிலையில் அது மேலும் குறைந்து கடந்த 2021ல் வெறும் 13,000 திருமணங்கள் மட்டுமே நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், 2022 ல் 16,666 பன்முக கலாசார திருமணங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு (2024) தென் கொரியாவில் நடைபெற்ற திருமணங்களில் இவ்வகை திருமணங்கள் சுமார் 9.3 சதவிகிதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தென் கொரியா ஆண்கள் திருமணம் செய்த வெளி நாட்டு பெண்களில் 32.1 சதவிகிதம் வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அதற்கு அடுத்தப்படியாக 16.7 சதவிகிதம் பேர் சீனப் பெண்கள் மற்றும் 13.7 சதவிகிதம் பேர் தாய்லாந்து பெண்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், தென் கொரியா பெண்கள் திருமணம் செய்யும் வெளி நாட்டு ஆண்களில் 28.9 சதவிகிதம் அமெரிக்கர்கள், 17.6 சதவிகிதம் சீனர்கள் மற்றும் 15 சதவிகிதம் வியட்னாம் நாட்டினர் என அந்த புள்ளி விவரங்கள் பட்டியலிட்டுள்ளன.

பன்முக கலாசார திருமணம் செய்தவர்கள் இடையே ஏற்படும் விவாகரத்துகள் தொடர்ந்து 1.4 சதவிகிதம் குறைந்து கடந்த ஆண்டில் வெறும் 6,022 விவாகரத்து வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

இதேபோல், கடந்த 9 ஆண்டுகளில் முதல் முறையாக தென் கொரியாவில் குழந்தை பிறப்புகள் அதிகரித்து கடந்த 2024 ல் 2,38,300 குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.