இஸ்ரேல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்! – ஹவுதி படைகள் அறிவிப்பு

இஸ்ரேல் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகின்றது.
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ்விலுள்ள பென் குரியோன் விமான நிலையத்தின் மீது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையின் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் அதன் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக யேமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஹவுதி ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யஹியா சரீயா கூறியதாவது, ஹவுதிகள் வடக்கு செங்கடலிலுள்ள அமெரிக்க போர் கப்பலான ஹேரி ட்ரூமன் மீது 5வது முறையாக நேற்று (மார்ச் 20) காலை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த புதிய தாக்குதலானது, யேமன் தலைநகர் சனா மற்றும் வடக்கு மாகாணங்களிலுள்ள மக்கள் குடியிருப்பின் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்கு பழி வாங்கும் நோக்கில் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அரசுகள் எந்தவொரு கருத்தும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் யேமன் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலை அறிந்து, அந்த ஏவுகணைகள் அந்நாட்டு எல்லைக்குள் வரும் முன்னரே இஸ்ரேலின் விமானப் படைகள் அதனை தகர்த்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த இரு மாதங்களாக கடைபிடிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து இஸ்ரேல் காஸாவின் மீதான தாக்குதலை தொடர்ந்தது. இதில், சுமார் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனால், கடந்த மார்ச்.17 அன்று இஸ்ரேலின் தெற்கு பகுதியிலுள்ள ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹவுதி படைகள் அறிவித்தது. ஆனால், அதனையும் இஸ்ரேல் ராணுவம் தகர்த்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.