அமெரிக்காவில் டெஸ்லா கார்களுக்கு தீ வைப்பு; உள்ளூர் பயங்கரவாதம் என எலான் மஸ்க் கண்டனம்!

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்திருக்கும் நிலையில், இதனை உள்ளூர் பயங்கரவாதம் என எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் பல டெஸ்லா வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் கார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவங்களும், நள்ளிரவில் டெஸ்லா கார் சேவை மையங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது.
டெஸ்லா கொலிஷன் சென்டரில் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் அங்கிருந்த ஐந்து வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த சம்பவங்களை விசாரித்து வரும் அமெரிக்க எஃப்பிஐ அதிகாரிகள், இது சில பயங்கரவாத சக்திகளின் பங்கு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாகன சேவை மையத்தின் உரிமையாளர் இதுபற்றி கூறுகையில் மதுபானம் ஊற்றப்பட்டு, மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். டெஸ்லா சேவை மையத்தின் முகப்புக் கதவில் எதிர்ப்பு என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்ததாகவும் விசாரணை தொடங்கியிருக்கிறது. எஃப்பிஐ அதிகாரிகளுடன் பயங்கரவாத அதிரடிப் படையினரும் இணைந்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா அமைப்புகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதர்கவும், இது தொடர்பான விடியோக்களில், கார்கள் எரிந்துகொண்டிருக்கும்போது, குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் கருப்பு நிற உடையில் கார்களுக்கு இடையே ஒரு பையுடன் நடந்து செல்வது பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தீயணைப்புப் படையினர் வருவதற்குள், வாகனத்தின் பேட்டரிகளுக்கு தீ பரவியதால், சில வாகனங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் டெஸ்லா தலைமை செயல் நிர்வாகி எலான் மஸ்க், இதனை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டிருப்பதோடு, இதுபோன்ற வன்முறைகள் முட்டாள்தனமானது மற்றும் மிகவும் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.