;
Athirady Tamil News

போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்ட ரஷ்யா: வெள்ளை மாளிகை தகவல்

0

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

போரை நிறுத்த முயற்சிகள்
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா, உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், இதுவரை லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போரை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நேருக்கு நேர் பேசிய ட்ரம்ப், போரை முடிவுக்கு கொண்டுவருமாறு திட்டவட்டமாக கூறினார்.

இந்த நிலையில், ரஷ்யா தரப்பிலும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ட்ரம்ப்-புடின்
இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இருவரும் பேசிக் கொண்டனர். அப்போது உக்ரைன் போரில் அமைதி மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தேவை பற்றி பேசிக்கொண்டனர்.

நீண்டகால அமைதியுடன் இந்த போர் முடிவுக்கு வருவதற்கான தேவை பற்றி தலைவர்கள் இருவரும் பேசி ஒப்புக்கொண்டதுடன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான தேவை பற்றியும் வலியுறுத்தினர்.

இதேபோன்று ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் தேவைகள் மற்றும் வேண்டுகோள்களுக்கு ஏற்ப, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனும் ட்ரம்ப் பேசினார்” என்றார்.

அத்துடன் ஜனாதிபதி ட்ரம்ப், போரில் செலவிட்ட தொகையை மக்களின் தேவைக்கு சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் என்று தொடர்ந்து கூறி வருவதாக குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.