;
Athirady Tamil News

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவும் தொற்று! எல்லைக் கட்டுப்பாடு விதித்த செக் குடியரசு!

0

ஸ்லோவாக்கியா நாட்டில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றினால் அதன் அண்டை நாடான செக் குடியரசு எல்லைக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஸ்லோவாக்கியா நாட்டின் மூன்று பண்ணைகளிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று பரவியுள்ளது. இதனால், அதன் பக்கத்து நாடான செக் குடியரசில் எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அந்நாட்டை கடக்கும் நான்கு முக்கிய எல்லைப் பாதைகளின் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கால்நடைகளுக்கு செக் குடியரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து செக் குடியரசின் வேளாண்மைத் துறை அமைச்சர் மாரெக் வைபோர்னி கூறுகையில், ஸ்லோவாக்கியாவுடனான எல்லையைக் கடக்கும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் முக்கிய விவசாய சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்களை தொடர்புக்கொண்டு அவசரகால நடவடிக்கைகள் மற்றும் கடுமையான உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இம்மாத (மார்ச்) துவக்கத்தில் கோமாரி நோய் பரவலினால் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கால்நடைகளுக்கு செக் குடியரசு தடை விதித்திருந்த நிலையில் அந்த தடைகள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் விலக்கப்பட்டது.

முன்னதாக, கோமாரி நோயானது ஆடு, மாடு, பன்றி மற்றும் செம்மறி ஆடு போன்ற கால்நடைகளை சுவாசக் காற்றின் வழியாகவும் விலங்குகளுக்கு இடையிலான நேரடி தொடர்பின் மூலமாகவும் தாக்கும் அபாயமுள்ளது.

இந்த நோய்யினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், பசியின்மை, அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, வாய் மற்றும் கால்களில் கொப்புளங்கள் ஆகிய அறிகுறிகள் உண்டாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.