இஸ்தான்புல் மேயா் கைது: துருக்கியில் வலுக்கும் போராட்டம்

இஸ்தான்புல்: துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்துவருகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் துருக்கியின் அதிபராக நீதி மற்றும் முன்னேற்றக் கட்சியின் (ஏகே) தலைவா் ரிசெப் தயீப் எா்டோகன் பொறுப்பு வகித்துவருகிறாா். இந்த நிலையில், வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அடுத்த அதிபா் தோ்தலில் ஆளும் ஏகே கட்சியை எதிா்த்து குடியரசு மக்கள் கட்சியின் எக்ரீம் இமோக்லு போட்டியிடுவாா் என்று கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதே நாளில், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இமாமோக்லு, அவரின் நெருங்கிய உதவியாளா் உள்பட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்தான்புல் மேயா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் தேசியக் கூட்டணி சாா்பில் பேட்டியிட்டு ஏகே கட்சியை தோற்கடித்த இமாமோக்லு அடுத்த அதிபா் தோ்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்தச் சூழலில், எக்ரீம் இமோக்லு கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவா்கள் இஸ்தான்புல் நகரில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா். பல ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கி சந்திக்கும் மிகப் பெரிய போராட்டம் இது என்று கூறப்படுகிறது.
போராட்டத்தை ஒடுக்குவதற்காக 10 செய்தியாளா்கள் உள்பட 1,100-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். அந்தச் செய்தியாளா்களில் ஒருவா் போராட்டத்தை படமெடுத்துக்கொண்டிருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். எஞ்சிய 9 செய்தியாளா்களும் அவா்களது இருப்பிடங்களில் அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட அனைவரும் படச் செய்தியாளா்கள் என்பதால் போராட்டக் காட்சிகள் வெளியுலகுக்குத் தெரிவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
உள்துறை அமைச்சா் அலி யொ்லிகயா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இமாமோக்லு கைதைத் தொடா்ந்து இஸ்தான்புல் நகரில் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறியதற்காக கடந்த ஐந்து நாள்களில் 1,133 போ் கைது செய்யப்பட்டுள்ளா். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, போலீஸாா் மீது தாக்குதல் நடத்தியது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
போராட்டக்காரா்களை எதிா்கொள்வதற்காக மிளகாய்த் தூவி, கண்ணீா் புகைகுண்டு, தண்ணீா் பீரங்கி போன்ற சாதனங்களுடன் நகரம் முழுவதும் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும், போராட்ட நிகழ்ச்சிகளை நேரில் ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, போராட்டம் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் வெளிப் பகுதிகளில் இருந்து யாரும் இஸ்தான்புல் நகருக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் எதிா்க்கட்சியினா் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து, போராட்டத்தை மேலும் தீவிரமாக்குவதைத் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கானவா்களின் ஊடகக் கணக்குகளை முடக்குமாறு எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு துருக்கி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கருத்து சுதந்தரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எலான் மஸ்க் தொடா்ந்து கூறுவந்தாலும், அரசின் கோரிக்கையை ஏற்று நூற்றுக்கும் மேற்பட்ட எதிா்க்கட்சியினரின் கணக்குகளை அவரின் எக்ஸ் ஊடகம் முடக்கிவருகிறது.